இளைய சமூகத்தினரிடம் விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்க்கும் நிலை அருகி வருகின்றது – வட மாகாண ஆளுநர் வேதனை

இன்றைய பிள்ளைகள் பாடசாலை முடிந்தவுடன் ஒன்றில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். இல்லையேல் அலைபேசியுடன் வீட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர். விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்ப்பது அருகி வருகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் புதுவருட விளையாட்டு விழா – 2025இ இரண்டாம் நாள் நிகழ்வு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக வடபுல மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (15.04.2025) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டனர். 

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில்,  விளையாட்டுக்கள் பொழுதுபோக்குக்கு மாத்திரம் உரியவை அல்ல. அவை எங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும், தலைமைத்துவத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்களிடம் மற்றையவர்களை மதிக்கும் பண்புகளையும் காணலாம். 

ஆனால் துரதிஷடவசமாக எமது பிரதேசங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அருகிவருகின்றது. பல ஊர்களில் இருந்த விளையாட்டுக்கழகங்கள் இன்று செயற்றிறன் இழந்திருக்கின்றன. ஆனால் உங்கள் விளையாட்டுக் கழகத்தில் இரவு நேரத்திலும் விளையாட்டுப் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது. 

இன்றைய மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றமைக்கு, விளையாட்டுக்களில் பங்கேற்காமை பிரதான காரணமாகும்.

இந்தப் பிரதேசத்து இளையோர் அதிகளவில் விளையாட்டுக்களில் கவனம் செலுத்துவதால் சமூகப்பிறழ்வுகளில் ஈடுபட்டதாக எந்தவொரு முறைப்பாடும் இல்லை என உங்கள் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சொல்லியிருந்தார். உண்மையில் விளையாட்டுக்களிலும், கலைச் செயற்பாடுகளிலும் இளையோர் நாட்டம் செலுத்தினால் சமூகப்பிறழ்வுகள் எவ்வளவோ குறைவடையும். 

உங்களது விளையாட்டுக்கழகம் போன்று ஊர்கள்தோறும் விளையாட்டுக்கழகங்கள் உருவாகி இளையோரை அவர்கள் ஈர்த்தால் எதிர்காலத்திலாவது சிறந்த நிலையை அடையமுடியும், என நம்புகின்றேன் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். 

விளையாட்டுக்கழகத் தலைவர் கு.பாலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் கலந்து கொண்டார்.

விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஆளுநர் பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *