ரணில் விக்ரமசிங்கவின் முக்கிய பணிப்பாளருக்கு வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளராக இருந்த துசித ஹல்லொளுவைக்கு வெளிநாடு செல்லத் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், துசித ஹல்லொளுவ ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

அதற்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அவர் தேசிய லொத்தர் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பதவி வகித்த காலத்தில், லொத்தர் சபைக்குச் சொந்தமான பெறுமதியான கம்பியூட்டர் ஒன்றையும், தொலைபேசி ஒன்றையும் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கோட்டைப் பொலிசார் தாக்கல் செய்த குறித்த வழக்கில் துசித ஹல்லொளுவைக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், வௌ்ளிக்கிழமை (02)அவர் தன் சட்டத்தரணிகள் ஊடாக கோட்டை  நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதன் ​போது கடந்த நல்லாட்சிக் காலத்தில் லொத்தர் சபையால் தனக்கு வழங்கப்பட்ட கம்பியூட்டர் மற்றும் தொலைபேசி என்பவற்றின் பெறுமதியை கடந்த 2024ம் ஆண்டு காசுக்கட்டளை (மணி ஓடர்) மூலமாக தான் செலுத்திவிட்டதாக துசித ஹல்லொளுவை தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

அதனையடுத்து இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்ட கோட்டை மாஜிஸ்திரேட் லங்கா நிலுபுலி, துசித ஹல்லொளுவை வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *