IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (21) நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியானது 59 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2025 ஐ.பி.எல். தொடரின் புள்ளிகள் பட்டியலில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான MI அணியானது நான்காவது இடத்துக்கு முன்னேறியதுடன், பிளேஆஃப் இடத்தையும் உறுதி செய்தது.

அதேநேரம், அக்ஸர் படேல் தலைமயிலான DC அணியானது பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல். தொடரின் 63 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற DC அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய MI அணி, சூர்யகுமார் யாதவின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது.

ஒரு கட்டத்தில் போட்டியில் MI அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது.

எனினும், சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை எடுத்தார்.

இவரின் இந்தவொரு சிறப்பான ஆட்டம் அணியை நல்ல ஓட்ட இலக்கினை நிர்ணயிக்க அழைத்துச் சென்றார்.

DC அணி சார்பில் பந்து வீச்சில் முகேஷ் குமார் அதிகபடியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும், நான்கு ஓவர்களில் அவர் 48 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

பின்னர், வழக்கமான தலைவர் அக்ஸர் படேல் இல்லாது ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையில் 181 என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய DC அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சமீர் ரிஸ்வி மாத்திரம் அதிகபடியாக 35 பந்துகளில் 39 ஓட்டங்களை எடுத்தார்.

MI சார்பில் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *