மதுபோதையில் மாதா சுருவத்தை அடித்து நொருக்கிய குழுவினர்; NPP அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது!

மதுபோதையில் மாதா கோயிலிற்குள் புகுந்து மாதா சுருவத்தை உடைத்த குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் (25) குறித்த ஆலயத்தின் பகுதியில் இருந்து மது அருந்தியதாகவும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சுற்றுலாவுக்காக வருகைதந்த சுற்றுலா பயணிகளுடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளனர். 

கடும் மதுபோதையில் இருந்த குறித்த குழுவினர், ஆலயத்தில் இருந்த இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு சுமார் 50 இலட்சம் பெறுமதியான மாதா சுருவத்தை அடித்து முழுமையாக உடைத்து சேதமாக்கிவிட்டு தப்பித்துச்  சென்றுள்ளனர்.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர்  உள்ளிட்ட  8 பேரைக் கைது செய்தனர்.

ஏனையோர் கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் விசாரணைகளையடுத்து குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *