கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்!

மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல் நேற்று (30) கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது.

வெளியுறவுக் கொள்கை விடயங்கள் மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள இவ்வுரையாடலானது ஆக்கபூர்வமான தளமொன்றாக செயற்பட்டதுடன், இது இருநாட்டு மேம்பட்ட ஒத்துழைப்புக்கு வழி வகுத்தது.

இவ்வுரையாடல்களில், வர்த்தகம் மற்றும் முதலீட்டில் பகிரப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

ஜப்பான் தரப்பிற்கு இலங்கை அதன் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் கடன்படுநிலைமையில் நீடிப்புத்திறனை சிறப்பாகப் பேணுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து விளக்கிய, அதே நேரத்தில் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் (OCC) இணைத் தலைவராக ஜப்பானின் குறிப்பிடத்தக்க பங்கிற்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தது.

ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) பெறுமதி மற்றும் இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அதன் கணிசமான பங்களிப்பை இந்த உரையாடல் அடிக்கோடிட்டுக் காட்டியது.

தற்போது 63,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜப்பானில் வசிப்பதால், இரு தரப்பினரும் நிலையானதும், பரஸ்பர நன்மை பயக்குவதுமான புலம்பெயர்வு கட்டமைப்புகளுக்கான வழிகளை ஆராய்ந்ததுடன், தொழிலாளர் புலம்பெயர்வு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும் உரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் காவற்துறை ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இந்த உரையாடலுக்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின், இருதரப்பு அரசியல் விவகாரங்களுக்கான (கிழக்கு) மேலதிகச் செயலாளர் திருமதி சசிகலா பிரேமவர்தன மற்றும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரத் துறையின் பணிப்பாளர் நாயகமும், ஜப்பான் வெளியுறவு அமைச்சின் உதவி அமைச்சருமான மியாமோட்டோ ஷிங்கோ ஆகியோர் இணை-தலைமை வகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *