மாங்குளத்தில் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்; நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல்!

மாங்குளம் பொதுச்சுகாதார பிரிவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்  மற்றும் கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு , மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று கடந்த 06ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.  

குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற சுகாதார குறைபாடுகளுடன் மற்றும் புழுப்பிடித்த , வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 

அத்துடன் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் குறித்த உணவகங்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக மாங்குளம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது மாங்குளம் மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்று  எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன்போது  சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்கண்டு மொத்தமாக 240,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. 

மேலும் மாங்குளம் பகுதியில் உள்ள இரண்டு கடைகள் சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யும் வரை மூடுமாறும் உத்தரவிட்டதோடு கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன் ,வைத்தியர் சஞ்சீவன் ஆகியோர்களின் ஆலோசனையில் மாங்குளம் பொது சுகாதார பரிசோதகரான நதிருசன், முத்தையன்கட்டு பொதுச்சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பொதுசுகாதார பரிசோதகர் டிலக்சன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *