அவர் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராவார்.? ஐ.சி.யூவில் உள்ள ரணிலின் நிலை பற்றி டாக்டர் கேள்வி

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரணில்  விக்ரமசிங்கவை  நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த முடியுமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே  ‘தற்போது  தீவிர சிகிச்சையில் உள்ள ஒரு நோயாளியை எவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்?’ என டாக்டர் பெல்லனா கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் இதயம், சிறுநீரகம்  உள்ளிட்ட ஏனைய உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை பணிப்பாளர் டாக்டர்   ருக்ஷன் பெல்லனா தெரிவித்தார்.

சிறைச்சாலை மருத்துவமனையில்  இருந்து தேசிய மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து கொழும்பில் உள்ள ஊடகங்களுக்கு விளக்கம் கொடுக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணிலை நேரில் பரிசோதித்ததாகவும் ரத்தத்தில் அசாதாரண மாற்றங்கள்  மற்றும் நீரிழிப்பு  நோய்க்கான அறிகுறிகளை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

ரணிலுக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு கடுமையான ஓய்வும் சிகிச்சையும் தேவை, அவருக்கு சரியான பராமரிப்பு  இல்லை என்றால் அது இதயம் அல்லது சிறுநீரக  செயல் இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார். 

மின்சாரம் தடைப்பட்டதால் போதுமான  அத்தியாவசிய  வசதிகள்  கிடைக்காமல் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்பட்டது தான் ரணிலின் உடல்நிலை மோசமடைய காரணம் எனவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பல சிறப்புப் குழுக்களால்  உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

முறையாக கையாளப்பட்டால் இரண்டு, மூன்று நாட்களுக்குள் அவரது உடல்நிலை மேம்படும் என்றும்  தீவிர சிகிச்சை  கிடைக்காவிட்டால் அது நீரிழிப்பு, இதயம் மற்றும் மூளையை பாதிக்கக்கூடிய  நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும் டாக்டர் பெல்லனா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *