03 மாதங்களாக படுக்கையில் இருந்த மனைவியை கொன்றுவிட்டு உயிர்மாய்த்த கணவன்

கொழும்பு – பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் ஆண் ஒருவர் தனது மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

75 வயதுடைய ஆண் ஒருவரே தனது 69 வயதுடைய மனைவியை இவ்வாறு கொலை செய்த பின்னர் தானும் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவர்களது மகள் மற்றும் அவரது கணவர் இன்று (25) ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர். 

அந்த நேரத்தில், குறித்த நபர் தனது மனைவியைக் கொலை செய்து, பின்னர் தானும் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். 

மகள் வீடு திரும்பியபோது இந்தச் சம்பவத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை இதே முறையில் கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கு முன்பு, இவர் தனது வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்திய புல்வெட்டும் இயந்திரத்தை விற்று பெற்ற பணத்தில் மது அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண் சுமார் 10 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக படுக்கையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *