இராணுவ முகாம்களை அகற்றுக பருத்தித்துறையில் கவனயீர்ப்பு – தீர்வுகள் கிடைக்காவிடின் போராட்டம் தொடரும்!

பருத்தித்துறையில் இராணுவ முகாம்களை அகற்றக் கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (25)  முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு  முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை 8:30 மணியளவில் ஆரம்பமாகி , வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று  கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல கட்சிகள் தமது முழுமையான ஆதரவை வழங்கியபோதும் தேசிய மக்கள் சக்தியினர் மட்டும் பங்களிப்பு செய்யவில்லை.

நீண்ட காலமாக இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படும் பருத்தித்துறை தபால் அலுவலகம் முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்புமிக்க வெளிச்ச வீட்டில் பல காலமாக இருக்கும் இராணுவத்தினை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 

நூற்றாண்டு காலமாக இருக்கும் பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடம் மாற்றம் செய்யும் நோக்கம் காணப்படுவதால் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களால்  தெரிவிக்கப்பட்டது. 

போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், EPRLF தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் எஸ்.வேந்தன், வலி வடக்கு தவிசாளர் தி.நிரோஸ் வின்சன்டி போல் டக்ளஸ் போல் நகரபிதா பருத்தித்துறை நகரசபை தம்பிராசா சந்திரதாஸ் தலைவர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *