தூக்கில் தொங்கி உயிர்மாய்த்த கைதி; குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் சம்பவம்!

குருநாகல் – குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று (29) பிற்பகல்  உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதி தான் அணிந்திருந்த சாரத்தால் கழுத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.  

சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டு  உயிர்மாய்த்துள்ளதை  அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

எனினும்  அவர் அதற்கு முன்பே உயிரிழந்து விட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேகநபர் மீது கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அதற்கமைய, குறித்த சந்தேகநபர் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பான அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் தற்போது குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *