மன்னார் பள்ளிமுனை அந்தோனியார் சிற்றாலயத்திற்கு அரச அதிபர் தலைமையிலான குழுவினர் விஜயம்!

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் கடல் தொலைவில் அமைந்துள்ள முந்தல்  கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார் சிற்றாலய பகுதிக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (23) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

அண்மையில் ஏற்பட்ட டிற்வா புயல் காரணமாக குறித்த அந்தோணியார் சிற்றாலயம் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக பள்ளிமுனை உள்ளடங்களாக குறித்த முந்தல்  அந்தோணியார் சிற்றாலய  பகுதியூடாக தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் குறித்த ஆலயத்தை தரிசித்து விட்டு செல்வது வழமை.

குறித்த ஆலயம் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தின் கீழ் உள்ளமையினால் பள்ளிமுனை புனித லூசியா ஆலய அருட்பணி சபையினர் குறித்த ஆலயத்தின் தற்போதைய நிலை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில்  குறித்த ஆலயம் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் நகர பிரதேச செயலாளர்  கே.காந்தீபன்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் நகர சபை உறுப்பினர்களான    சபா மைக்கல் கொலின் ரஜனி  பிகிராடோ  மற்றும் பள்ளிமுனை பங்குத்தந்தை ,பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாக பிரதிநிதிகள் ,பள்ளிமுனை மக்கள் ஆகியோர் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு மூலம் முந்தல்  அந்தோணியார் சிற்றாலயத்தை  சென்றடைந்தனர்.

பின்னர் குறித்த குழுவினர் சேதமடைந்துள்ள குறித்த சிற்றாலயத்தை பார்வையிட்டதோடு அங்கு சென்ற பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதுடன் சேதமடைந்த ஆலயத்தை புனர் நிர்மானம் செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply