தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகிலுள்ள அரியமான் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகு மூலம் கடத்தப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படும் 40 லட்சம் ரூபா மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் க்யூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று க்யூ பிரிவு பொலிஸார் அரியமான் கடற்கரைப் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, கடற்கரைக்கு அருகிலுள்ள தோப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் இலங்கைக்கு கடத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த 8 பெட்டிகளில் சுமார் 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு க்யூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தோப்பின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், அப்பகுதியில் இலங்கைக்கு கடத்த பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய நாட்டுப்படகுகள் ஏதேனும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் க்யூ பிரிவு பொலிஸாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





