நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை நிலவும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்பதால், மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதுடன், ஆற்றங்கரையோர மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.





