போதையில் பேருந்து பயணம்? காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!

போதைப்பொருள் பயன்படுத்தியபடி பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஹொரண பிரதான பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. ஹொரண, இங்கிரிய, மொரகஹஹேன மற்றும் அக்குருவாதொட்ட காவல்துறைகளின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுடன், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஹொரண நகரிலிருந்து சேவையில் ஈடுபட்டும், அந்தப் பகுதியை ஊடறுத்து பயணித்தும் வந்த பேருந்துகளின் 151 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பரிசோதனைகளின் முடிவில், போதைப்பொருள் பாவனையுடன் கடமையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இயக்கி வந்த நான்கு பேருந்துகளும் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 34 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Leave a Reply