மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து நடத்தும் ஒளவை விழா”எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு கல்லடி கிறீன்கார்டன் ஹோட்டலில் மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து நடத்தும் “அவ்வை விழா” தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வுகளை வெளி உலகிற்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகவியலாளர்களுக்கு கதிரவன் பட்டிமன்றப் பேரவை சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
எதிர்வரும் 21ஆம் தேதி, இந்த மாத ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு, மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒளவை சிலை முற்றத்திலே பிரம்மாண்டமான அவ்வை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேல்முருகன் சகோதரர்கள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலே புலமைமிக்க மூதாட்டியான ஒளவையாரின் திருவுருவச் சிலையினை நிறுவியுள்ளனர். அதன் நிமித்தம் கடந்த 2020ஆம் ஆண்டு முதலாவது ஒள்வை விழா, கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையோடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது விழாவினை ஏற்பாடு செய்த காலங்களிலெல்லாம் விலைவாசி ஏற்றம், கொரோனா தொற்று போன்ற ஏதோ ஒரு வகையிலான அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக அதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இந்த விழாவினைச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எனினும், தற்பொழுது பிரம்மாண்டமான போட்டிகளை நடத்தியதன் நிமித்தம் இந்த விழாவானது தற்பொழுது நடைபெற தயாராக இருக்கின்றது.
மிக முக்கியமாக, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களின் விவாதத் திறன்களை வெளிக்கொணரும் வகையில், மாவட்ட ரீதியாக விவாதப் போட்டி நடத்தப்பட்டு இரண்டு அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இடையிலான போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு அணிகள் இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளன.
மேலும், மாவட்ட ரீதியாக அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தப்பட்ட வில்லுப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான விருதுகளும் பணப் பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய ரீதியாக கவிதைப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, இலங்கை முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 131 கவிதைகள் வந்தடைந்துள்ளன. அவற்றுக்கான பரிசுகளும் பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த ஒள்வை விழாவின் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால், நாம் ஒரு சிலையைப் பார்க்கின்ற பொழுது, நமக்காக, மக்களுக்காக, கலை இலக்கியத்திற்காக, கலாச்சாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சார்ந்து செயல்பட்ட மூதாதையர்களின் சிலைகளைப் பார்க்கும்போது, வளர்ந்து வரும் இளம் சமுதாயத்திற்கு அந்தச் சிலை எதைக் குறிக்கிறது, ஏன் நிறுவப்பட்டிருக்கிறது,
அவர்கள் செய்த அற்புதங்கள் மற்றும் விளக்கங்கள் என்ன, இதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சிந்தனை உருவாக வேண்டும். அந்த சிந்தனையின் ஊடாக நல்லவற்றை எண்ணி, நல்லவற்றைச் செய்து, நற்பிரஜையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அந்த சிந்தனையை இன்னும் மேலோங்கச் செய்வதற்காகவே, சிலை நிறுவப்பட்ட இடங்களிலே நிகழ்வுகள் நடத்துவது வழக்கமாகும்.
அதன்படி, அவ்வை சிலை முற்றத்திலே 21ஆம் தேதி பிரம்மாண்டமாக இந்த விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பல அறிஞர்கள் வரவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.





