அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கைக்கு திடீர் விஜயம் – முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்துள்ளார். 

அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை வௌியிட்டுள்ளது. 

குறித்த சந்திப்பின் போது சிரேஷ்ட அரச மற்றும் வர்த்தக தலைவர்களுடனான அவரது சந்திப்புகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டை வளர்ப்பதிலும், கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. 

அத்துடன் இரு நாடுகளிலும் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கும், செழிப்பிற்கும் உதவி செய்யும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்து சமுத்திரம் பாதுகாப்பானதாகவும், திறந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (21) இலங்கை வந்துள்ளார். 

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையின் வளர்ந்து வரும் பலத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. 

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படைகளைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

வான் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு இணைய பாதுகாப்பு, அனர்த்தங்களின் போது செயற்பட வேண்டிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply