யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலையில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (30) வைத்தியசாலையில் இருந்து குறித்த கைதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்ற கைதியை மீண்டும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.




