மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகைகளை உருவாக்க வேண்டும்: வேலணை பிரதேச சபை

வேலணை,மே 20

நிதி ஈட்டல்களை வீணடிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும் என வேலணை பிரதேச சபை இன்று வலியுறுத்தியுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திகள் மற்றும் பல்துறைசார பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டது. குறிப்பாக பிரதேசத்தில் காணப்படும் சனசமூக நிலையங்களின் புதிய நிர்வாக தெரிவை வலியுறுத்திய உறுப்பினர்கள் ஆளுகைக்குள் இருக்கும் 44 நிலையங்களில் 12 நிலையங்களில் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் மிகுதி 32 ஐயும் உடனடியாக மேற்கொள்ள சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது  அவசியம் என்றும் இதற்கு சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன் எரிபொருட்களின் தடுப்பாடு காரணமாக வேலணை பிரதேசத்திலிருந்து பூவரசம் மரங்கள் தறிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இதனையும் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

லேவலணை நகரின் கடைத்தொகுதியை வர்த்தகர்களுக்கு வழங்குவது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடையின் மதிப்பீடு தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு அதனூடாக வர்த்தகர்களுக்கு துரித கதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே சபையில் நடைபெறும் விடயங்களை அறிக்கையிடலில்  உறுப்பினர்களின் கருத்துக்களை முமுமையாக  உள்வாங்கப்படுவது அவசியம் என்றும் தெரிவித்திருந்ததுடன் உள்ளக இடமாற்றம் தொடர்பில் சரியான நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் வாகன சாரதிகள் பலர் அதற்குரிய பதவி நிலையில் இல்லை. அதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் வலுவூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்த உறுப்பினர்கள் நாட்டு சூழலில் மக்களுக்கான நிதி ஈட்டல்களை வீணடிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

குறிகாட்டுவான் மற்றும் சாட்டி பகுதிகளில் சுற்றுலா மையம் அமைப்பதற்கு உலக வங்கியால் தலா 80 மில்லியன் நிதி வழங்கப்புள்ளது இதில் 3 வீதத்தை உள்ளூராட்சி மன்றங்களால் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள நிலைமையில் இந்த நிர்வாக செலவீனங்களை சபைகளால் முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வேலணை காரைநகர் நெடுந்தீவு ஆகியவற்றுக்கு சற்று சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் கூறினார். குறித்த விடயம் தொடர்பில் சபை உறுப்பினர்களால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட் நிலையில் இரு உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பிர்களின் ஆதரவுடன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply