பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக அனைத்தையும் மறந்து ஒன்றிணைய வேண்டும்-யாழ் வர்த்தக தொழில்துறை மன்றம்!

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சனைக்கு தோள் கொடுக்க கூடியதாக இருக்கும், எமது பிரதேசத்தினுடைய பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பக்கூடிய ஏதுவான நிலையாக இருக்கும் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உபதலைவர் விக்னேஷ் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்த நெருக்கடியான நிலையில் கல்விமான்கள், தொழில் துறையில் இருப்பவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் என அனைத்து பிரிவினரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிராந்தியத்தினுடைய அபிவிருத்தி முயற்சிக்காக அனைத்தையும் மறந்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளாக்கப்பட்டு இருக்கின்றோம். அந்த சமூக பொறுப்பினை உணர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

உண்மையில் பொருளாதார பிரச்சனையில் ஏனைய மாகாணங்கள் மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நாங்கள் வெற்றி கொள்ள முடியும். உண்மையில் யுத்த காலத்தில் எமது புலம்பெயர் மக்களின் உதவிகள்  தான் எம்மை  நிமிர்த்தியுள்ளது, எனவே  புலம்பெயர் மக்களின் முதலீடுகள் தேவையானது, தற்போதைய காலம் அதற்கு ஏற்றதாக இல்லாது போனாலும் நிச்சயமாக இந்த பிரச்சனையின் பின்னால் ஒரு சிறந்த ஒரு எதிர்காலம் இலங்கைக்கு இருக்கின்றது என்று கூற முடியும்.

கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் எனவே இலங்கைக்கு ஞாயம் கிடைக்கப் போகின்றது எனவே எதிர்வரும் காலத்தில்  புலம்பெயர்ந்துள்ள மக்கள்  வடபகுதியில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் வடபகுதியின் பொருளாதாரத்தை மென்மேலும் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply