
திருகோணமலை, ஜீலை 11
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை (10) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் திருகோணமலை, அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாகவும் 33 வயதுடையவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கன்னியா பகுதியில் இருந்து திருக்கோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து போக்குடன் (மதகுடன்) மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



