நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு தொழிலை இழந்து ஒருவேளை உணவின்றிய நிலையிலேயே அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் எனது மகனும் கலந்துகொண்டான் என அண்மையில் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞரின் தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மஹவ தலதாகமவில் வாடகை வீட்டில் வசித்துவரும் எனது மகனுக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உண்டு. முச்சக்கரண்டி வைத்து தனது அன்றாட வாழ்வை ஓட்டுக்கின்றான். தற்போதைய பொருளாதார நெருக்கடி அவரது வாழ்வை சீர்குலைத்துள்ளது. முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற நான்கைந்து நாள்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதனால் அன்றாட வருமானம் கேள்விக்குறியான நிலையில் ஒருவேளை உணவின்றி மனைவி குழந்தைக்கு பால்மா இல்லாது ஏற்பட்ட மனஅழுத்தத்தாலேயே எனது மகன் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டான்.
இந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்த்தபோதும் அவன் உயிரிழந்துவிட்டான்.
இன்று நாட்டு மக்கள் எனது மகனைப் போல அன்றாட வருமானமில்லாமல் அழுத்தத்தையும் வேதனையையும் சுமக்கின்றனர். நாட்டின் உயரிய பதவிகளில் இருப்போர் மக்கள் படும் துன்பங்களைக் கண்டுகொள்வதில்லை.

அவர்களுக்கு அதிகாரம் மட்டுமே தேவை. அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆட்சியாளர்களால் ஒரு நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்.
பாவம் மக்கள். மக்கள் படும் துன்பத்தைக் கண்டு மகன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். இன்று நம் மக்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். இன்று என் மகன் போல் நாளை இன்னொருவர் உயிரைக் கொடுப்பதற்கு முன் தற்போதுள்ள பிரச்சினைக்கு முடிவு காணுங்கள் –என்றார்.



