
யாழ், ஜுலை 16
பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக திறம்படச் செயற்பட்டதுடன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும், கெருடாவில் 1 ஆம் வட்டார நிர்வாக செயலாளராகவும் மக்கள் பணியாற்றிய, கலட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் ஆதீனகர்த்தாவும் பிரதம குருக்களுமான சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் பத்மநாதக் குருக்களின் இழப்புச் செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடுகையில் –
சைவ குருமார் அர்ச்சகர் பேரவையின் போசகர், மாணிக்கவாசகர் குருகுலத்தின் ஸ்தாபகர் எனப் பலவேறு சமூக அமைப்புக்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்திய அன்னார், எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகளைப் புரிந்து கொண்டு, நீண்ட காலமாக தன்னுடைய பங்களிப்பினையும் வழங்கி வந்திருந்தார்.
கெரடாவில் கிராமத்தின் மூத்த வழிகாட்டியாக விளங்கிய பத்மநாதக் குருக்களின் இழப்பு நிச்சயம் அவரது குடும்பத்தினருக்கு மாத்திரமன்றி, கெருடாவில் கிராம மக்களுக்கும் தாக்கம் மிக்க ஒன்றாகவே இருக்கும்.
இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரினதும் துன்பத்தில் பங்கெடுப்பதுடன் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



