ஜனாதிபதி தெரிவில் தமிழ் தரப்புக்கள் என்ன செய்ய வேண்டும்? – தமிழ் சிவில் அமைப்புக்களின் கோரிக்கை

ஜனாதிபதி தெரிவில் தமிழ் தரப்புக்களின் நிலைப்பாடு தொடர்பில் யாழ்.மாவட்ட தமிழ் சிவில் அமைப்புக்களின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் அரசியல் செயற்பாட்டாளர் யோதிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

யூலை 19ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறும். 2 ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக வாக்களித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வர். அவர் எஞ்சிய காலத்திற்கு பதிவகிப்பார்.

ஜனாதிபதி தேர்தலில் நான்கு பேர் போட்டியிடுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிறேமதாசா, டளஸ் அழகப்பெரும, அனுரகுமார திசநாயக்கா என்போரே அவ் நால்வருமாவர். இந்நால்வரும் பெரும் தேசியவாதத்தின் லிபரல் பிரிவையும் இனவாதப்பிரிவையும் சேர்ந்தவர்கள். இவர்களில் எவருமே தமிழ் மக்களின் நண்பர்களல்லர். எனவே தமிழ் மக்கள் யார் தொடர்பாகவும் சார்புநிலையை எடுக்க முடியாது. நால்வருமே தமிழ் மக்கள் நிலை நின்று கையாளப்படவேண்டியவர்கள்.

எனவே தமிழ் மக்கள் சார்பில் பின்வரும் கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.

  1. தமிழ்த் தரப்பின் பங்களிப்பைப் பெறுவதற்கு சிங்களத்தரப்பு நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். எனவே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் பின்வரும் விடயங்களுக்கு தீர்வு காணுதல் வேண்டும்.

I. அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் எந்தவித நிபந்தனையுமில்லாமல் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும். இதற்கேற்ற வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

III. நிலைமாறு கால நீதிக் கோட்பாட்டிற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தீர்க்கப்படல் வேண்டும். இது விடயத்தில் உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு கால அட்டவணை வகுத்தல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

III. இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.

IV.2009 க்கு பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்படல் வேண்டும்.

V. தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன தினைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை, பௌத்த விவகாரங்கள் அமைச்சு என்பன தமிழர் தாயகத்தில் மேற்கொள்கின்ற ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். தமிழ் மக்களுக்கென பொருளாதார சபை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் .

VI. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்தவாறு மீள அழைப்பு, சட்டவாக்க உரிமை என்பன மக்களுக்கு வழங்கப்படுவதோடு மக்கள் கண்காணிப்புச் சபையும் உருவாக்கப்படல் வேண்டும்.

  1. அரசியல் தீர்வு தொடர்பாக சிங்கள தேசத்திற்கும் தமிழ்த்தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படல் வேண்டும். அதில் தமிழ்த்தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம், சுயநிர்ணய சமஸ்டி என்பன ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இதற்கான அரசியல் யாப்புச்சட்ட வடிவம் ஆறு மாதங்களுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்.
  2. அரசியல் தீர்வு வரும் வரை இடைக்கால நிர்வாகம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். அந்த நிர்வாகத்திற்கு காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் உட்பட தமிழ் மக்களின் விவகாரங்களை கவனிப்பதற்கான சுயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும்.

எல்லாவற்றிலும் முக்கியம் இந்த மூன்று செயல் திட்டங்களுக்குமான ஒப்புதல் சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் வழங்கப்படல் வேண்டும்.

இந்த கோரிக்கைகளை ஏற்கும் ஜனாதிபதி வேட்பாளரையே தமிழ்க் கட்சிகள் ஆதரிக்கலாம். எந்த ஜனாதிபதி வேட்பாளரும் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வாக்களிப்பிலிருந்து தமிழ்க் கட்சிகள் விலகிக்கொள்ள வேண்டும். இவ்விவகாரம் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளுடன் அவசரமாக ஏனைய பொது அமைப்புக்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply