தமிழர்களின் ஆதரவு யாருக்கு? இன்று தீர்மானம்

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் என்ன பாத்திரத்தை வகிப்பதென தமிழ் தேசிய கட்சிகள் இன்று (18) கூட்டாக ஒரு முடிவிற்கு வரும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

பிரதான தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் இணைந்து தமிழ் மக்கள் சார்பில் சில நிபந்தனைகளை முன்வைக்க கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளன.

இது தொடர்பான தீர்மானங்களை இறுதி செய்ய இன்று மூன்று முக்கிய சந்திப்புக்கள் நடைபெறவுள்ளன.

இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் இடம்பெறும்.

கட்சியாக என்ன தீர்மானத்தை எடுக்கலாமென்பது பற்றி இரண்டு தரப்பும் நாளையே தீர்மானம் எடுப்பார்கள் என கருதப்படுகிறது.

இது தவிர 6 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று சூம்வழியாக கலந்துரையாவுள்ளனர். தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன இன்று கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.

இந்த கட்சிகள் நேற்றும் சிறிது நேரம் இணைய வழி கலந்துரையாடலில் ஈடுபட்டனர் தமிழ் மக்கள் சார்பில் சில நிபந்தனைகளை கூட்டாக முன்வைக்க தீர்மானித்துள்ளன. இன்று நிபந்தனைகள் இறுதி செய்யப்படும்.

இனப்பிரச்சனைக்க சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வு, உடனடி விவகாரங்களாக அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், காணிகள் விடுவிப்பு, தொல்லியல் ஆக்கிரமிப்பு நிறுத்தம், போராட்டக்குழுக்களின் நிபந்தனைகளை அங்கீகரிப்பது, வேட்பாளர்கள் தமிழ் தரப்புக்களுடன் பேசுவது உள்ளிட்ட விடயங்கள் நிபந்தனைகளாக முன்வைக்கப்படும்.

இதேவேளை, ரணிலுடன் பேச்சே நடத்தக் கூடாது என தமிழ் தரப்பில் சில கட்சிகன் முடிவு செய்துள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கட்சி, இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் போராட்ட நோக்கங்களை மடை மாற்றுகிறது, அவர் ராஜபக்சக்களின் அரசியல் தொடர்வதற்கு வழியேற்படுத்தகிறார், புதிய மாற்றத்திற்கு தடையாக இருந்து பழைய ஊழல் அரசியலின் தொடர்ச்சியையே ஏற்படுத்துவார், 2015 காலத்தை போல ராஜபக்‌ஷக்களை பாதுகாத்து அடுத்த தவணையிலேயே அவர்களின் மீள் வருகைக்கு வழியேற்படுத்துவார் போன்ற நியாயமான காரணங்களை முன்வைத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனினும், விக்னேஸ்வரன் தரப்பு, ரெலோ, புளொட், தமிழ் அரசு கட்சியின் ஒரு தரப்பு என்பன ரணிலுடனும் பேசலாம் என குறிப்பிட்டு வருகின்றன.

தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திற்கு விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்டாக தீர்மானம் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, க.வி.விக்னேஸ்வரனுடன் நேற்று ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்கள். உடனடியாக, விக்னேஸ்வரனை சந்திக்க ரணில் விரும்பினார். எனினும், தமிழ் தரப்புக்கள் கூட்டாக நிபந்தனைகளை தயாரித்து வருவதாகவும், அதை வேட்பாளர்களிடம் சமர்ப்பித்து, அதிக நிபந்தனைகளை நிறைவேற்ற உத்தரவாதமளிப்பவருக்கே தமிழர்களின் ஆதரவு கிடைக்குமென்பதை விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply