
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகம, ஹீனடியான பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் மஹகம, ஹீனடியான பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான முச்சக்கரவண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதாக பிரதேசவாசிகளுக்கு அறிவித்துவிட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார்.
வழியில் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் குறித்த நபரை வாள்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் எனினும் கொலையை செய்தவர்கள் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





