
யாழில் கோயில் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் 7பேர் காயம்!
யாழ்ப்பாணம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் 7பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு சப்பரத்திருவிழா இடம்பெற்றது. அதன் போது , ஆலய சூழலில் பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் பக்தர்கள் மத்தியில் புகுந்து அவர்களை மோதித்தள்ளிக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த குறித்த டிப்பர் வாகனத்தினை பொலிஸார் வழி மறித்த போது , டிப்பர் வாகனம் பொலிசாரின் உத்தரவை மீறி மிக வேகமாக தப்பி சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் தப்பி சென்றுள்ள நிலையில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

