ஜனாதிபதி வாக்கெடுப்பில் நாம் பங்குபற்ற மாட்டோம்! கஜேந்திரகுமார் எம்.பி. அறிவிப்பு

ஜனாதிபதி தேர்வின் வாக்கெடுப்பில் நாம் பங்குபற்ற மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடாக சந்திப்பின் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், சிங்களத் தலைவர்களுக்கு அக்கறை இல்லை. மக்களின் வாழ்க்கையை குலைப்பதற்கு ராஜபக்சாக்களுக்கு எந்தளவு பங்கு இருக்கின்றதோ, அதே அளவுக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்கு இருக்கிறது. ஆகவே இவர்களை நம்பி பலன் இல்லை. இந் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாக்கெடுப்பில் பங்குகொள்ளாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மைத்திரி மற்றும் ரணில் இணைந்த கடந்த நல்லாட்சிக் காலத்தில், ஒற்றை ஆட்சி முறையை ஆதரித்து பல விடயங்களை அரங்கேற்றினர். ஆகவே அந்த வகையில் அவரை ஆதரிக்க முடியாது.

ரணில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர், என்னை சந்தித்தார். அப்போதும் கூட சமஸ்டி சரிவராது என்ற வகையில் அவரின் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

கோட்டா அரசை வீழ்த்த வேண்டும் என்று நான் கூறிய போது, அதற்கு அவர் அன்றே சம்மதம் தெரிவிக்கவில்லை. இன்று அவர் நடந்து கொள்வதில் எல்லாமே தெரிகிறது. அவர் ராஜபக்சவின் பக்கமே நிற்கிறார். அதற்கு பின்னரும் எம்மை அவர் தொடர்பு கொண்டார், நாம் அதை மறுத்து விட்டோம். இவ்வாறான காரணங்களுக்காக தான், நாம் ரணிலை ஆதரிக்கவில்லை.

இதே காரணங்கள் தான் சஜித் பிரேமதாசவையும் சாரும். அவருடன் நாம் அதிகாரப் பகிர்வு பற்றி பேசிய போது, அவர் இந்தியாவின் பஞ்சாயத்து முறை பற்றி எமக்கு விளக்கினார். அதற்கும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் என்னுடன் தொலைபேசியில் கதைத்தார். அதே போன்று தான் ஜெ.வி.பி இன் நிலைமையும் இருக்கிறது. – என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply