ஜனாதிபதி, அலரி மாளிகையை சேதப்படுத்திய 70 பேர் அடையாளம்!

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தி, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் இதுவரையில் சுமார் 70 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீவைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேரடி காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்கள் வழியாக காண்பித்து மக்களை தூண்டிய நபர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே ஏனையவர்களும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகப் பயண தடையை பெற்றுக்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply