
கொழும்பு,ஜுலை 20
வாகன இலக்கத் தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நடவடிக்கையின் போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வாகன இலக்கத் தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி இலக்கமான 3, 4 மற்றும் 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரம் நாளை எரிபொருள் விநியோகிக்கப்படுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் தற்போது 80 ஆயிரம் மெற்றிக் டொன் டீசல் இருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 35 ஆயிரம் மெற்றிக் டொன் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





