ஜனாதிபதிக்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வாழ்த்து!

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதி தெரிவாகியிருப்பது, தாய்நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

நாட்டின், எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான தனது வாழ்த்து செய்தியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“தேவையான நேரத்தில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். மக்கள் பிரதிநிதிகளில் அறுபது வீதமானோர் புதிய ஜனாதிபதியை ஆதரித்துள்ளனர்.

மேலும், பல இனங்களையும் பெரும்பாலான கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்துள்ளது. எனவே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன்.

படுகுழிக்குச் சென்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்த சர்வதேசத்தின் உதவிகளே தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ரணிலை ஜனாதிபதியாக நாடாளுமன்றம் தெரிந்திருப்பது, சிறந்த தீர்க்கதரிசினமிக்க செயலாகும்.

சர்வதேசத்தில், புதிய ஜனாதிபதிக்குள்ள கீர்த்தியாலும், ஜனநாயகத்தில் ரணில் வைத்துள்ள நம்பிக்கையாலும் இந்த உதவிகளைப் பெறமுடியும். இனவாதிகள் மற்றும் அடக்கு முறையாளர்களின் முகாம்களுக்குள் சிறுபான்மை கட்சிகள் முடங்கியதன் நோக்கம் எங்களுக்குத் தெரியாத விடயமுமில்லை.

இந்தக் கூட்டத்தை தோற்கடித்து, அதிகாரத்துக்கு அலைவோருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளோம். மக்களின் பட்டினியைப் போக்குவது பற்றிச் சிந்திக்காமல், பழிவாங்கும் மனநிலையில் உள்ள தலைவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிறசெய்திகள்

Leave a Reply