மாற்றுப் பாலினத்தவர்களுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்! – மஹேல கோரிக்கை

மாற்றுப் பாலினத்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சட்டங்களை நீக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் மாற்றுப் பாலினத்தவர் மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் அழுத்தங்கள் குறித்து தாம் வருத்தமடைவதாகவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டங்களை மாற்றுவது எவ்வளவு இன்றியமையாததோ, அதேயளவு கல்வியில் சீர்திருத்தங்கள் மூலம் மனநிலையை மாற்றுவதும் முக்கியம் என்று அவர் கூறினார். இலங்கையில் எந்தவொரு விரிவான பாலியல் மற்றும் உறவுமுறைக் கல்வி இல்லை.

இது நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

குடும்பங்கள் தங்கள் மாற்றுப் பாலினத்தவர் குழந்தைகளை ஏற்று அவர்களுக்கு ஆதரவாக நிற்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஜயவர்தன பேசினார்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு குறித்து பேசிய இலங்கையின் அவர், எந்தவொரு நபரும், அவர்களின் பாலின நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு விளையாட்டிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கூறினார்.

மாற்றுப் பாலினத்தவர் இலங்கையர்களை விளையாட்டில் பார்க்க விரும்புவதாகவும், ஒருவரின் பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளம் யாருடைய விளையாட்டிலும் விளையாடும் திறனை பாதிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

பிறசெய்திகள்

Leave a Reply