திருகோணமலை தென்னவன்மரவடி கிராமத்தில் சுகாதார நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சுகாதார நிலையம், சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (18)காலை நடைபெற்றது.
IMHO அமைப்பின் பிரதானி மருத்துவர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன்தர்சன பாண்டிகோராள பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்க்குரிய கலாநிதி நோயல் இமானுவல், குச்சவெளி பிரதேச செயலாளர் குணநாதன், திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வீ. பிறேமானந்த் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
IMHO அமைப்பு 2004ம் வருடம் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இனம் மதம் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுக நிறுவனமாகும்.
இது 2010ம் வருடம் பிரித்தானியாவிலும் கனடாவிலும் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த சுகாதார நிலையம், பிரித்தானியாவில் உள்ள பரோபகாரிகளின் நிதி பங்களிப்பில் 8.8 மில்லியன் நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ தாதி ஒருவர் 24 மணி நேரமும் சேவையாற்ற கூடியவாறும் வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது மருத்துவர் ஒருவர் இங்கு வருகை தந்து சிகிற்சை வழங்க கூடியதாக தாங்கள் இதனை செயற்படுத்த உள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
அயற்கிராமத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறக்கூடிய வாய்ப்புகளும் வழங்கப்படுவதுடன் வைத்திய சாலைகளில் உள்ளதைப் போன்று பரிசோதனை உபகரணங்களையும் வழங்க உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் லண்டனில் இருந்து வருகை தந்த அமைப்பின் உறுப்பினர்களால் ஆடைகளும் மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




