போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது

ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வாழைச்சேனை புகையிரத நிலைய  வீதிக்கு அருகில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் பிரைந்துறைச்சேனை  பகுதியை சேர்ந்த  18 வயது மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 6 கிராம் 500 மில்லிகிராம்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் வாழைச்சேனை பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply