பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல் தொடர்பாக மூன்று நாள் பயிற்சி!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ‘பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல் என்ற தலைப்பிலான  பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்று நாள்  பயிற்சி மட்டக்களப்பு கிறீன் கார்டன் விருந்தினர் விடுதியில் நேற்று (புதன்கிழமை)  ஆரம்பமானது.

ஜேர்மன் ஹோப்ரேஷன் மற்றும் பிளேன் இன்டநெஷனல் நிறுவனங்களின் நிதிப் பங்களிப்பில்  பெரண்டினா அபிவிருத்திச் சேவை நிறுவனத்தால்  நடைமுறைப்படுத்தப்படும் “இலங்கை சமூக அமைப்புகளிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களை கிராமிய தொழில் முயற்சியாண்மையில் வலுப்படுத்தல்” என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இப்பயிற்சிநெறி நடைபெறுகிறது.

இம்மாதம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப் பயிற் சியாளர்களுக்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்   சுதர்சினி சிறிகாந்த் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பெரண்டினா நிறுவனத்தின் ‘இலங்கை சமூக அமைப்புகளிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களை கிராமிய தொழில் முயற்சியாண்மையில் வலுப்படுத்தல்’ என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.சிவராஜாவின் தலைமையில்  நடைபெறுகின்ற  இந்நிகழ்வில்,

மட்டக்களப்பு  மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் கடையாற்றும்  பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  பெரண்டினா நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இவ் மூன்று  நாள் பயிற்சி நெறியில்  வளவாளர்களாக இனோகா பிரியதர்சினி மற்றும் சுபாசினி காளிமுத்து ஆகியோர்  கலந்து கொண்டு பால்நிலை பற்றிய எண்ணக்கருக்கள், பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கான சட்டகம், பெண்களின் தொழில் முயற்சியாண்மை. கிராமிய தொழில் முயற்சிகளில் வலுவான பெண்கள் மற்றும் இளைஞர்களின்  முன்னேற்றத்தை அளவிடுவதற்கான குறிகாட்டிகள் உள்ளிட்ட  தலைப்புகளில் விரிவுரைகளையும்  பயிற்சிகளையும் வழங்குகின்றனர்.

இப் பயிற்சிநெறியில் பயிற்சிபெறும் உத்தியோகத்தர்கள் மாவட்டத்தின்  அனைத்துப்பிரதேசங்களிலும்  உள்ள பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கான பயிற்சிநெறிகளை மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *