அனுமதியின்றி கட்டப்பட்ட சிலை தொடர்பில் வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை: திலீபன் எம்.பியின் கோரிக்கை! SamugamMedia

வவுனியா நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட பத்மநாபாவின் சிலை தொடர்பில் கவனம் செலுத்திவிட்டு, நாளாந்த வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகளை அகற்றுங்கள் என  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (17.03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

போராடிய தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கு நான் எதிர்ப்பில்லை. ஆனால் முறையான அனுமதிகள் பின்பற்றப்பட்டதா என்பதே என்னுடைய கேள்வி. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டியை வாழ்வாதரமாக கொண்ட முச்சக்கர வண்டி சங்கத்திற்கு அலுவலகம் அமைக்கப்பட்ட போது முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து அந்த கட்டுமாணப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.

 நாளாந்த வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகியோரை நகரசபை குற்றவாளிகள் போல் அவர்களது பொருட்களுக்கும் சேதம் விளைவித்து அள்ளிச் செல்கின்றது. அவ்வாறு சட்டப்படி இயங்குவதாக இருந்தால் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பத்மாநாபாவின் சிலை வைப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா? நகரசபை செயலாளர் மற்றும் நகரசபை என்ன செய்ய வேண்டும். உள்ளுராட்சி திணைக்களம் என்ன செய்கிறது. பொலிசாருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே முறையற்ற விதத்தில் இந்த சிலை அமைக்க அனைவரும் ஒத்துழைத்துள்ளார்கள். ஆனால் அப்பாவி மக்களுக்கு எதிராக சட்டத்தை காவித் திரிகிறார்கள்.

இனிமேல் வவுனியா நகரில் வீதியோர வியாபாரிகளை நகரசபை அகற்றுவதாக இருந்தால் முதலில் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்ட சிலையை அகற்றிவிட்டு செல்லுங்கள். அதனை அகற்றாது விட்டால் வீதியோர வியாபாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கூடாது எனத் தெரிவித்தார்.

இதில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், உள்ளுராட்சி மன்ற பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், நகரசபை செயலாளர், பிரதேச சபை செயலாளர், பொலிசார், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *