ரணில் – ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம் -எஸ்.பி.திஸாநாயக்க ஆரூடம்! samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் எதிர்கால அரசியலில் ரணில், ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், 

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பலமுறை அழைப்பு விடுத்தார்.

பொருளாதார பாதிப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.

ஆசை, பயம் என்ற காரணத்தால் அவர் பின்வாங்கினார். ஆனால் தனி ஆசனத்தை வைத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.அதுவே சிறந்த தலைமைத்துவம்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏகமனதாக தீர்மானித்தது.

எமது தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்கால அரசியலில் ரணில், ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம்.

குறுகிய காலத்திற்குள் நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. பணவீக்கம் குறைவடைந்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *