மட்டு புகையிரத கடவை காப்பாளர்கள் போராட்டம்..! பொலிஸார் நடாத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து முடிவுக்கு!samugammedia

மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்குள் புகையிரத கடவை காப்பாளர்கள் முன்னெடுத்த போராட்டம் பொலிஸார் நடாத்திய பேச்சுவார்த்தையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

சம்பள அதிகரிப்பு,நிரந்தர நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாண புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்குள் ரயிலின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் புகையிரத கடவை காப்பாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் புகையிரத கடவை காப்பாளர்கள் ஈடுபட்டனர்.

நாட்டில் பொருளாதார சுமைகள் காரணமாக மக்கள் தினமும் கஸ்டங்களை எதிநோக்கிவரும் நிலையில் கடந்த பத்து வருடங்களாக மாதாந்தம் 7500ரூபா சம்பளத்திற்கே தாங்கள் கடமையாற்றிவருவதாக கடவை காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2013ஆம் ஆண்டு தாங்கள் பொலிஸ் திணைக்களம் ஊடாக புகையிரத கடவை காப்பாளர்கள் நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட்டதாகவும் மூன்று மாதங்களுக்கு நாள் சம்பளமாக 250ரூபாவும் மூன்று மாதங்களுக்கு பின்னர் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்பதுடன் ஆறு மாதங்களில் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்கப்படுவீர்கள் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் ஆனால் நியமனம் வழங்கப்பட்டு இன்று வரையில் நாளொன்றுக்கு 250ரூபா வீதம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சம்பள அதிகரிப்பு நிரந்தர நியமனம் ஆகியவற்றினை வழங்குமாறு வலியுறுத்தும் வகையிலான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ‘ஒரு நாள் சம்பளம் 250ரூபாபோதுமா?’,’தொழிலாளர் சட்டத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கு’, இலங்கை ஜனநாயக குடியரசே?2064ஊழியர்களை நாடு கடத்து’,அரசே உடனடி நிரந்தர நியமனம் வேண்டும்’போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது போராட்டத்தினை முன்னெடுத்த புகையிரத கடவை காப்பாளர்கள் புகையிரத போக்குவரத்தை தடுத்து போராட்டம் நடாத்த முற்பட்ட நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

கடந்த காலத்தில் தாங்கள் போராட்டம் நடாத்தியபோது அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டபோதிலும் தாங்கள் உள்வாங்கப்படாமல் அந்த நியமனத்தின் ஊடாக வந்தவர்களை நியமனங்களுக்குள் உள்வாங்கி தங்களை புறக்கணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை நாடெங்கிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத கடவை காப்பாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *