மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு சந்தர்ப்பம்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!samugammedia

இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது அடிப்படை மனித உரிமைகளை முறையாக மீறுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் இன்று குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே இந்த யோசனையை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் தரத்தை நிலைநிறுத்துகிறது என்பதை ஆலோசனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான விமர்சனங்களைத் தொடர்ந்து, அதனை மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது எனவும் எனினும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, சொத்து சேதம், திருட்டு அல்லது கொள்ளை போன்ற குற்றங்களை உள்ளடக்கிய பயங்கரவாதத்தின் வரையறையை இந்த யோசனை விரிவுபடுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமைகளையும் இது கட்டுப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

இந்தநிலையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், அமைதியான விமர்சகர்களை மௌனமாக்குவதற்கும் சிறுபான்மையினரை குறிவைப்பதற்கும், இலங்கை அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்

Leave a Reply