யாழில் கொவிட் இடை தங்கல் நிலையங்களில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் வந்தது எவ்வாறு? – அதிர்ச்சி அடைந்த விசாரணை குழு!samugammedia

யாழ். மாவட்டத்தில்  செயற்பட்ட கொரோனா இடைத்தங்கல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் மீள ஒப்படைக்கப்படாத நிலையில் திடீரென ஒரு தொகுதி பொருட்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் வந்து இறங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
 2019 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காரணமாக யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கொள்ளானவர்களுக்கு  சிகிச்சை அளிக்கும் முகமாக  மூன்று இடைத் தங்கல் நிலையங்கள் செயற்படுத்தப்பட்டன.
நாவற்குழி, மருதங்கேணி வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட குறித்த இடைத்தங்கல் நிலையங்களுக்கு தேவையான குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம் தொலைக்காட்சி மற்றும் பிளாஸ்டிக் தகரங்கள் என பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மூன்று நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது.
 அப்போதைய வட மாகாண சுகாதார பணிப்பாளராக இருந்த வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனின் கண்காணிப்பில் இயங்கிய குறித்த இடை தங்கல் நிலையங்கள் கொரோனா இடர் நிலை குறைவடைந்த பின்னர் முற்று முழுதாக அகற்றப்பட்டது.
இவ்வாறு அகற்றப்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் பாவித்த பொருட்களில் பெரும்பாலானவை  வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும்  கணக்குப் பிரிவிடம் மீள  வழங்கப்படவில்லை.
அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள், மாவட்ட அனர்த்த முகமைத்துவப் பிரிவினால் வழங்கப்பட்ட பொருட்கள், யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பொருட்கள், மற்றும்  அரசை சார்பற்ற நிறுவனங்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்கள் என பல மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மூன்று இடைத் தங்கல் நிலையங்களும் பகிரப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த இடை தங்கல் நிலையங்களில் பாவிக்கப்பட்ட பொருட்கள் மீள ஒப்படைக்கப்படாமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் அப்போதைய பிரதம மந்திரியான மஹிந்த ராஜபக்ச குறித்த விடயம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநருக்கு பணித்திருந்தார்.
எனினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் எழுந்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சினால் உள்ளக விசாரணை சற்று கால தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த விசாரணை குழுவில் வட மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன் தலைமையில் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்ட நிலையில் குறித்த விசாரணை குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்கள் இடம்பெற்றது.
கொரோனா இடைதாங்கல் நிலையங்களில் பாவிக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சுகாதார அமைச்சிடம் மீள ஒப்படைக்கப்படாத நிலையில் விசாரணை ஆரம்பிக்கப்போகிறது என அறிந்த நிலையில்  திடீரென தீவகப் பகுதியில்  உள்ள வைத்தியசாலையில் காணாமல் போன பல பொருட்கள் இறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் விசாரணை குழு தனது விசாரணையை முழுமையாக முடிக்காத நிலையில் பொருட்கள் திடீரென வந்து இறங்கியமை விசாரணை குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply