ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலும் அதன் பின்னணி குறித்து அசாத் மௌலான ஜெனீவாவில் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள தூபி முன்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு அன்று சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 31பேர் உயிரிழந்துள்ளதுடன் 85க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இதனை நினைவுகூலும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபையினால் குறித்த தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் அஞ்லி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மெழுகு திரி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மாநகர முன்னாள் முதல்வர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
வருடா வருடம் நாங்கள் இந்த தூபியில் அஞ்சலி செலுத்தி வருகின்றோம்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணையில் இன்று வரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று தான் நான் பார்க்கின்றேன்.
அண்மையில் அசாத் மௌலானா என்பவர் ஜெனிவாவில் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது கட்சியைச் சார்ந்த சிலரை அவர் குற்றம் சாட்டி இருக்கின்றார். எனவே இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை சரியான முறையில் விசாரணை செய்து உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் .
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கம் இவ்வாறான ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கிருக்கின்றார்கள்.
இந்த ஏப்ரல் குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அதற்கு ஒரு துரும்புச்சிட்டாக அசாத் மௌலானா வழங்கியுள்ள வாய் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை நடத்தி அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.