உலகத்தில் உள்ள அசையக்கூடிய அனைத்தையும் உண்ணுகின்றமையே சீனாவின் உணவுப் பாரம்பரியமாக காணப்படுகின்றது எனவும் அழிந்துவரும் விலங்குகளில் கறுப்பு சந்தையாக சீனா விளங்கிவருகிறது என்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டபூர்வமான முறையிலும் சட்டபூர்வமற்ற முறையிலும் வெளிநாடுகளிலுள்ள காடுகளிலிருந்து விலங்குகளை சீனா பெற்றுக்கொள்வதாக பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
சீனாவிலுள்ள உயிருள்ள விலங்குகளை விற்பனை செய்கின்ற இடங்களிலிருந்தே கொரோனா போன்ற நோய்கள் பரவியதாகவும் குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை மறுப்பதற்காகவே, இலங்கையிலுள்ள சீன தூதரகம் குரங்குகள் தொடர்பான வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கவில்லை என அறிவித்துள்ளதாகவும் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
அத்துடன் குரங்குகளை ஏற்றுமதி செய்யாமல் ராஜபக்ஷ சகோதரர்களுடன் தற்போதையே ஆட்சியாளர்களையே சீனாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
குரங்குகளை ஏற்றுமதி செய்வது பொருத்தமில்லாத செயற்பாடு எனவும் அந்த முயற்சிகளை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.