இறுதி நாள் போராட்டத்திற்காக தையிட்டியில் அணிதிரளுங்கள் -தமிழ்த் தேசியப் பேரவை அறைகூவல்…!samugammedia

வலி வடக்கு தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் இறுதி நாளான நாளையதினம் இடம்பெறும் போராட்டத்திற்காக தையிட்டிக்கு அனைவரையும் அணி திரளுமாறு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்றையதினம் புதன்கிழமை பிற்கல் 3.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கவனீர்ப்புப் போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இப்போராட்டத்தை தடைசெய்வதற்கான உத்தரவினைக்கோரி நீதிமன்றுக்கு சென்ற பொலீசார் நீதிமன்றில் பொய்களைக் கூறி நீதிமன்றத்தை தவறாக வழி நடாத்தி தடையுத்தரவைப் பெற முயன்றனர்.

எனினும் தையிட்டி மக்கள் சார்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் சட்டத்தரணி க.மகிந்தன் ஆகியோர் மக்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தன் அடிப்படையில் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி  குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் விஜயம் செய்திருந்தார்.

விகாரையின் முகப்பிலோ, அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்தாது, வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உச்சவத்திற்கோ இடையூறு ஏற்படுத்தாமலும், அமைதிக்குப் பங்கம் விளைவிக்காமலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடாத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அதன் பிரகாரம் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட வகையில் அமைதியான முறையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை இரவு தொடரும் போராட்டம் நாளை 05-05-2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை தொடரும். பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினாலே இவ்வாறான ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தவும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கவும் அத்துமீறி  கட்டப்பட்ட விகாரையை அப்புறப்படுத்தவும் முடியும்.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தையிட்டி விகாரைக்கு முன்பாக உள்ள தனியார் காணியில் இடம்பெறும் அமைதியான போராட்டத்தில் கலந்து  கொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் வலி வடக்கு – ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply