யாழ். மாவட்டத்தில் இவ் வருடம் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்காக 600 வீட்டு திட்டம் வழங்கப்பட்டுவதாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் முரளிதரன் (காணி) தெரிவித்த நிலையில் இறுதிப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட விடையதானங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் முரளிதரன் வீட்டு திட்டம் தொடர்பில் விளக்கம் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலதிக அரச அதிபர் முரளிதரன் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் வீடு திட்டங்கள் 379, ஆறு இலட்சம் ரூபாய் வீட்டு திட்டம் 221 ம் வழங்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அதாவது நலம்புரி நிலையங்களில் இருந்தோர் விசேடதவையுடையவர்கள், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவை முன்னுரிமைப் படுத்தப்படுகிறது.
எனினும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படாத நிலையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதும் அதனை உரிய இடங்களில் காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.