அடுத்த வருடத்தில் இருந்து அதிகளவிலான நிதி ஒதுக்கப்படும் துறைகள்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு! samugammedia

அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாம் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் எமது செலவுகளையும் நாம் உரிய முறையில் முகாமைத்துவம்  செய்திருக்கலாம். கடந்த பத்து வருடங்களில் நமது செலவினங்கள்  தொடர்பில் பார்கின்ற போது, நாம் கல்விக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் சில அரச நிறுவனங்களுக்கே அதிகமாக பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்பதை கண்டுகொண்டேன்.

நாட்டுக்கு நல்ல கல்வி முறையொன்று அவசியம். இந்தக் கல்வி முறையில் மிக முக்கியமான விடயம் பிள்ளைகளுக்குத் தேவையான அறிவை வழங்குவது. நாம் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். அனைவருக்கும் தேவையான அறிவை வழங்க முடிந்தால், நாட்டின் எதிர்கால வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

இலங்கை, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய நாடாகும். எனவே, அறிவை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பாடசாலைக் கல்வியை வழங்கிய பின், தொழில் தகைமையை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இன்று பல அமைப்புகள் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இன்றைய தேவைக்கேற்ப நமது கல்விமுறை நவீனமயப்படுத்தப்படவில்லை. அதனால் நாம் 10-15 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். நாம் இப்போது புதிதாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்த அறிவை வழங்குவதற்கு தேவையான பயிற்சியை அரசாங்கத்தால் மாத்திரம் வழங்க முடியாது. அந்த பயிற்சி மற்றும் அறிவு பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு வெளியே உள்ளன. இந்த அறிவை வழங்கக் கூடிய தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply