கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இந் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.
இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் போக்குவரத்து கட்டணங்கள் மிகவும் உயர்வாக உள்ளன. இதனால் நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்களின் நலன்கருதி இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருக்குமானால் அங்கு கடமைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எதிர்வரும் ஓராண்டில் 10 பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் , பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க,ஆளுநரின் செயலாளர்,மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , அரச உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.