யாழ். பல்கலைக்கழகத்தில் பல பீடங்கள் இருந்தாலும் கலைப்பீடம் எமது மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு பீடமாக காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழத்தில் திறந்து வைக்கப்பட்ட கலாநிதி கா. இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சிய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்தில் இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டமை தொல்லியல் சார்ந்து ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு ஊன்றுகோலாக அமையும் என நம்புகிறேன்.
யாழ். பல்கலைக்கழகத்தில் பல பீடங்கள் இருக்கின்றன அவை அனைத்தும் இலங்கை முழுவதற்குமான பீடங்களாக உள்ள நிலையில் எமது வரலாறு தொல்லியல் சார்ந்து ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு இந்த தொல்லியல் அருங்காட்சியகம் அடித்தளம் இட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் யாரையும் தாங்கி வாழ வேண்டிய தேவையில்லை அவர்களுக்கென மொழி, கலாச்சாரம் ,வாழ்வியல் பண்பாடு, உணவுப் பழக்க வழக்கம் என்பன தன்னகத்தே உரியது.
நாம் வருவதை எதிர்வு கூறக் கூடிய அரைவாற்றல் உள்ளவர்கள் திட்ட முன் ஆயத்தம் உள்ளவர்கள் ஆய்வுகளை இன்னும் ஆய்வு செய்ய கூடியவர்கள்.
நூலகர் முருகவேலை நாம் மறந்துவிட முடியாது. சித்த மருத்துவ துறையின் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட அகத்தியரின் 25 ஆயிரம் ஏட்டுச் சுவடுகள் அவரால் பாதுகாக்கப்பட்டது.
சித்த மருத்துவத்துறையை பீடமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனோடு சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் முன் வந்ததா சிங்களம் முன் வந்ததா என்ற பிரச்சனை எமக்குத் தேவையில்லை தமிழ் மொழி தனித்து இயங்கக்கூடிய, மொழி உதாரணமாக கூற வேண்டுமானால் நாயன்மார்கள் பாடிய பாடல்களில் ஒரு வடமொழிக் கலப்பு கூட இடம்பெறவில்லை.
ஆகவே கலாநிதி இந்திராபாலாவின் தொல்லியல் அருங்காட்சியகம் எமது மக்களின் வாழ்வியலையும் வரலாற்று ஆய்வுகளையும் முன்னெடுத்துச் செல்கின்ற கலைத்துறை சார்ந்த மாணவர்களுக்கு ஊன்றுகோலாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வரலாற்று துறை தலைவர் திருமதி சாந்தினி அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீ சற்குணராஜா, ஓய்வுநிலை வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், பேராசிரியர் சி.ரகுராம், சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சயிதரன், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.