யாழில் பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள்..! வெளியான காரணம்..!samugammedia

யாழ் மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை, குடும்பப் பிரச்சினை  காரணமாக தரம் 9, 10 தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகலும் பாடசாலைக்கு ஒழுங்கீனமாகச் சமூகமளிக்கும்  பிரச்சினை காணப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

நேற்றையதினம்(31)  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே குறித்த விடயத்தை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில்,

கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர்.அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே ஆது 113 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 60 பேர் இடைவிலகியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 20 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 351பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் அது 35 ஆகக் குறைவடைந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 170 பேர் இடைவிலகியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 137 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 390 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 312 ஆக அதிகரித்துள்ளது.

தென்மராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 7 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில்  7 பேர் இடைவிலகியுள்ளனர்.வரவு ஒழுங்கற்ற மாணவர்களாகக் கடந்த ஆண்டு 92 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 59 ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சிக் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 72 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 25 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 87 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது 65 ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது.

பாடசாலைகளில் மீளிணைத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் சில நாள்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வராமல் விடும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 9ஆம் மற்றும் 10ஆம் தரத்துடனேயே அதிகளவானோர் இடைவிலகுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். இடைவிலகலை சட்டத் தால் கட்டுப்படுத்தமுடியாது. இந்த விடயத்தை மானசீகமாகச் செய்யவேண்டும்.
பாடசாலை இடைவிலகல் ஊடாக எமது இளம் சமுதாயம் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றது. எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப்போகின்றது. பாடசாலை இடைவிலகலைக் கண்டும் காணாததுபோல் இருக்கமுடியாது.

ஒவ்வொரு காரணங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. நான் அதிபராக இருந்த காலத்தில் கிளிநொச்சியில் அரிவி வெட்டுக் காலங்களில் மாணவர்களைப் பெற்றோர் வயலுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவர்கள் பாடசாலைக்கு வரமாட்டார்கள். அப்படியான சூழலில்இ பாடசாலைக்கு மாணவர்களை நேரம் தாழ்த்தி வருவதற்கு நான் அனுமதித்திருந்தேன்.

அத்துடன் ஒருநாள் அல்லது இரு நாள் விடுப்பில் இருப்பதற்கும் அனுமதித்தேன். இவ்வாறு களச் சூழலை உணர்ந்து அதிபர்கள். அதிகாரிகள் கடமையாற்றுவதன் ஊடாகவே இடைவிலகலைக் கட்டுப்படுத்தலாம். இதில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது எனவும் சிறீதரன் இதன்போது  சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், வலயக்கவ்வி பணிப்பாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வலயக்கல்விப் பணிப்பாளரின் தலைமையில் குழுக்களை அமைத்து இதற்கான தீர்வுகளைக் காண முற்படுமாறு யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் டக்லஸ் தேவானந்தா வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply