வவுனியாவில் நீரேந்து பிரதேசத்தை மறித்து அடாவடி- மக்களுக்கு இடையில் முரண்பாடு- பொலிசார் தலையீடு! samugammedia

வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தும் வகையில் சிலர் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக அங்கு மக்களுக்கு இடையில் இரு குழுக்களாக முரண்பாடு ஏற்பட்டையடுத்து பொலிசாரின் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

இன்று (04.06) காலை முதல் மதியம் வரை இடம்பெற்ற இவ்முரண்பாடு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த பட்டானிச்சூர் புளியங்குளத்தின் நீரேந்து பிரதேசத்தை விடுமுறை நாட்களில் சிலர் கையகப்படுத்தி வேலி அடைத்து வந்திருந்தனர்.

இதனையடுத்து, 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் கடந்த 08.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.


அதில், வவுனியா கோவில்குளம் கமநல அபிவிருத்தி திணைககள பிரிவில் அமைந்துள்ள பட்டாணிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.

2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டாணிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம் அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்பட்டதுடன்,அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், இன்று (04.06) காலை குறித்த பகுதியில் உள்ள நீரேந்து பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் சமூகத்தினர் இணைந்து சட்டவிரோதமான முறையில் வேலி அமைக்கப்பட்ட பகுதியினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், மரக்கன்றுகளையும் நாட்ட முனைந்தனர்.  

இதன் போது, வவுனியா மாவட்ட கமக்கார சம்மேளனங்களின் தலைவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதியின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை  நிறுத்துமாறு தெரிவித்திருந்தார். எனினும் தொடர்ந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்னக முன்னெடுக்கப்பட்டமையினால் தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியதுடன் சில மணிநேர குழப்ப நிலமையினையடுத்து நிலமையினை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இரு தரப்பினனரயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று இருவரிடமும் முறைப்பாட்டினை பெற்றனர்.  இவ்விடயத்தினை நீதிமன்றிக்கு எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


Leave a Reply