தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து இன்றையதினம்(11) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கினுடைய ஏனைய மாவட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பாராளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக, கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே, தலையிடாதே தலையிடாதே, நீதித்துறையின் சுதந்திரத்தில், நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்
இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














