வழமைக்கு திரும்பியது வைத்தியசாலையின் செயற்பாடுகள்! samugammedia

வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்களுடன் நடத்திய சந்திப்பின் பின், வைத்தியசாலை பணிகள், தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளரான, வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு குறித்து ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்ட போதிலும், தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை, வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண் வைத்திய நிபுணர் ஒருவரின் செயற்பாடு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், பணிகளை முன்னெடுக்க வைத்தியர்கள் இணங்கியதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை போன்ற இடத்தில், பணிப்புறப்பணிப்பை முன்னெடுக்க, பெரும்பாலான வைத்தியர்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவின் சிகிச்சைப் பணிகள் வழமைபோன்று இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், ஆய்வுகூட நிபுணர்கள், தங்களின் கடமைகளில் இருந்து திடீரென விலகியுள்ளதாக, சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *